சென்னை: தமிழ்நாட்டிலேயே பவர் கட் மிகுந்த தொகுதி பெரம்பூர் தொகுதிதான் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசினார். சட்டப்பரேவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
"முதல்வருக்கு திமுக சார்பாக எங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறோம். ஆட்சிபொறுபேற்று 40 நாட்கள் முடிந்துவிட்டது. ஆளுநர் உரையில் 40 நாட்களில் இந்த அரசு ஏதேனும் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்களா? என்று நானும் எங்களது சட்டமன்ற உறுப்பினர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தோம். ஆனால் எங்களுக்கு மிஞ்சியது வெறும் ஏமாற்றம் மட்டுமே. தமிழ்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுங்கள் என்று சொன்னேன். அதன்படி தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன்பிறகு மரபை மீறி தேசியகீதம் இரண்டு முறை பாடப்பட்டிருக்கிறது. ஆளுநர் உரை ரீல்ஸ் கன்டென்ட்டிற்கு உதவுமே தவிர ரியல் பிரச்னைகளுக்கு உதவுவதாகத் தெரியவில்லை.
ஆளுங்கட்சியின் நிறை குறைகளை சொல்வதுதான் எதிர்கட்சியின் வேலை. ஆனால் இப்போது இருக்கக்கூடிய ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதில் முந்தைய எதிர்கட்சிகளை விட எங்களுக்கு அதிக பொறுப்பும், அதிக உரிமையும் இருக்கிறது.
அதற்கு காரணம் எங்களுடைய கூட்டணி கட்சியாக இருந்து எங்கள் உடன் பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று எங்களின் தயவில் தான் அரசு நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால் எங்களின் வாக்கு எதிர்கட்சியில் மட்டும் இல்லை. ஆளுங்கட்சியிலும் எங்களின் ஓட்டு இருக்கிறது.
நாங்கள் எதிரி கட்சியாக இல்லாமல், ஆக்கபூர்வமான எதிர்கட்சிகளாக செயல்பட விரும்புகிறோம். எங்களின் வேண்டுகோளை ஏற்று மகளிர் உரிமைத்தொகையைக் கொடுத்ததற்கு நன்றி. அதேபோல காலை உணவு திட்டத்தை 8- வகுப்பு வரை நீட்டித்திருக்கிறீர்கள் அதற்கும் நன்றி. ஆனால் எங்களின் நான் முதல்வன் திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கேள்விபட்டேன்.
நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்த நான் முதல்வன் திட்டம் மூலம் 41 லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள். சென்ற ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் வென்ற மாணவர்களில் 56 பேர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள். இப்படிபட்ட நான் முதல்வன் திட்டத்தை முடக்க காரணம் என்ன?
நிதி ஆயோக் கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழு நன்றாக செயல்படுகிறது என்று முதல்வர் பேசியிருக்கிறார். திரைப்படத்தில் தான் ஏழையாக இருக்கக்கூடிய மனிதன் 5 நிமிடத்தில் பணக்காரன் ஆவார். அதுமாதிரி ஒரு மாத ஆட்சியில் மிகப்பெரியதாக தமிழகத்தை மாற்ற முடியாது.
இந்த சாதனைகள் எல்லாம் யார் ஆட்சி காலத்தில் நடந்தது என்று மக்களுக்கு தெரியும். முதல்வருக்கும் தெரியும். அதேபோல எங்களுடைய ஆட்சியில் எதாவது நல்லது நடந்திருந்தால் அதில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள். அறநிலையத்துறையின் வருவாய் அதன் புனிதமான நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் இடம்பெற்றிருக்கிறது.
அறநிலையத்துறையே இருக்கக்கூடாது என்று சொல்கின்ற பாஜகவின் குரலாகத்தான் தவெக அரசும் இருக்கிறதா? என்ற சந்தேகம் வருகிறது. அறநிலையத்துறை கல்லூரிகளை நடத்தக்கூடாது என்று பாஜக சொல்கிறது. இதற்கு முதல்வர் விளக்கம் தர வேண்டும். முதல்வர் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் பெரம்பூர் தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றி இருக்கிறார். எதில் தெரியுமா? மின்வெட்டில்... பல்வேறு இடங்களில் மின்வெட்டுகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அண்ணன் திருமா அவர்களும் மின்வெட்டில் பாதிக்கப்பட்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ஆளுங்கட்சியின் அலுவலகத்திலேயே மின்சாரம் போய்விட்டது. அங்கு வந்தவர்கள் ஆளுங்கட்சியாக இருந்தும் பவர் இல்லையே என்று புலம்பி இருக்கின்றனர். தமிழ்நாடே இருட்டில் மூழ்கி இருக்கிறது. இதற்கும் காரணம் திமுகதான் காரணம் என்று சொல்கிறார்கள்.
முதல்வர் ஆட்சியில் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை, பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. பெண்களுக்கு எதிரானக் குற்றச் சம்பவங்களைப் பார்க்கும்போது நாம் தமிழகத்தில்தான் இருக்கிறோமா? இல்லை உ.பி மாதிரியான வட மாநிலத்தில் இருக்கிறோமா? என்ற சந்தேகம் எழுகிறது. பெரும்பாலானக் குற்றவாளிகள் ஆளுங்கட்சியாகவே இருக்கிறார்கள். முதல் வேலையாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்" என்று பேசினார். இதற்கான பதில்களை இடைஇடையே அமைச்சர்கள் ஆதவ் அர்ச்சுனா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் அளித்தனர். தொழில் துறை தொடர்பான கேள்விக்கு பேரவைக்கு வெளியே தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.