சென்னை: தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் அவர்களின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் முடிவுற்ற பின்பு, தொழில் துறை அமைச்சர் எஸ்.கீர்த்தனா அவர்கள் சட்டமன்றப் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விபரம்: 

இன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஒரு வரி குற்றச்சாட்டை முன்வைத்துவிட்டு வெளியேறிவிட்டார். அவர் கூறியவை அனைத்தும் பொய்யென நிரூபிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர்களது உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளியேறிவிட்டனர். நாங்கள் ஆதாரங்களை முன்வைப்பதற்குள் அவர்கள் சென்றுவிட்டதால் அவையிலேயே பதிலளிக்க முடியவில்லை. எனவே, இன்று அதற்கான விளக்கத்தை சொல்கிறேன். ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு பல்வேறு தொழில் முதலீடுகள் சென்றுவிட்டதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அவை தொடர்பான நிறுவனங்களின் பட்டியலையும் அதற்கான
காரணங்களையும் சொல்கிறேன். அதற்கு முன்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் ஆட்சிக் காலத்தில் அண்டை மாநிலங்களுக்கு சென்ற முதலீட்டுத்
திட்டங்கள் குறித்து ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் 25 முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு சென்றுள்ளன. அவற்றின் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.3.3 லட்சம் கோடி. இதன் காரணமாக சுமார் 2 லட்சத்து 3 ஆயிரம் வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் இழந்துள்ளனர். இந்த முதலீடுகளால் ஏழு மாநிலங்கள் பயனடைந்துள்ளன. 

2024ஆம் ஆண்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செமிகண்டக்டர் ஃபேப் திட்டம் குஜராத்திற்கு சென்றது. JSW குழுமத்தின் மின்சார வாகன பேட்டரி மற்றும் ஸ்மெல்டிங் திட்டம் ஒடிசாவிற்கு சென்றது. சுசுகி மோட்டார் நிறுவனத்தின் ஆட்டோமொபைல் திட்டமும் குஜராத்திற்கு சென்றது. மைக்ரான் டெக்னாலஜியின் ஏடிஎம்பி திட்டமும்
குஜராத்திற்கு சென்றது. டொயோட்டா மோட்டார் நிறுவனத்தின் திட்டம் மகாராஷ்டிராவிற்கு சென்றது. 2024ஆம் ஆண்டில் மட்டும் அவர்கள் எவ்வளவு
திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு சென்றுள்ளதால் இழந்திருக்கிறார்கள் என்பதை புள்ளிவிவரங்கள் தெளிவாக காட்டுகின்றன. 

ஆனால், வெறும் முப்பது நாட்களில் ஆந்திரப் பிரதேசத்திற்கு முதலீடுகளை அனுப்பிவிட்டதாக எங்களை குற்றம் சாட்டுகின்றனர். அதற்கான பதில்களை வழங்குகிறேன். ரகுநாதன் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பேசியபோது அப்போலோ டயர் நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறினார். ஆனால்,
அப்போலோ டயர்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் இரண்டு புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அவற்றில் ஒன்று ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீசிட்டிக்கு அருகே, ஏற்கனவே அந்த நிறுவனம் வைத்திருக்கும் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது. 

இது தொடர்பான தகவல் 2026 பிப்ரவரி மாதத்திலேயே எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இது புதிய திட்டம் அல்ல. இரண்டாவது திட்டமாக, ஒரு கிரீன்ஃபீல்ட் அல்ட்ரா மெகா திட்டத்திற்காக தமிழ்நாட்டுடன் கலந்தாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக தென் தமிழகத்தில் நிலம் தேர்வு செய்யும் பணியை நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேசத் திட்டம், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கிரீன்ஃபீல்ட் திட்டக் கலந்தாய்வுகளை எந்த வகையிலும் பாதிக்காது என நிறுவனம் உறுதி அளித்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது
தமிழ்நாட்டில் நான்கு உற்பத்தி ஆலைகளையும் ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆலையையும் இயக்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கு வெளியே ஒரு உற்பத்தித் தளத்தை அமைப்பது, நிறுவனத்தின் இடர் குறைப்பு உத்தியின் ஒரு பகுதியாகும். 

ஆந்திரப் பிரதேசத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஆலை அதன் ஐந்தாவது ஆலையாக அமையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆந்திரப்
பிரதேச அரசுடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் 2025 அக்டோபர் மாதத்தில் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தன. அதன்பின்னரும் ராயல்
என்ஃபீல்டு நிறுவனம் தனது நான்காவது உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டின் செய்யாறில் தொடங்கி வைத்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தைப்
பொறுத்தவரை, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024இல் கையெழுத்திடப்பட்ட hydro storage திட்டத்திற்கான முதலீடு தமிழ்நாட்டிலேயே தொடர்கிறது. மேலும், அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

வேலூர் மாவட்டம் அல்லேரியில் முதற்கட்ட பணிகளுக்காக டான்ஜெட்கோ நிறுவனம் விருப்பம் தெரிவிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது சாத்தியக்கூறு ஆய்வுகளும் பொறியியல் பணிகளும் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாம்
கட்ட பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் குழுமத்தால் செய்யப்படும் எந்தவொரு கலந்துரையாடல்களும், அறிவிப்புகளும்,
தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தின் தற்போது மட்டும் நடைபெற்றுவரும் முதலீட்டிற்கு கூடுதலாக ஒரு தனி முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பானவை
ஆகும்.

இதுவரை அவர்கள் கூறியது போன்று எந்தத் திட்டமும் தமிழ்நாட்டிலிருந்து செல்லவில்லை. அவர்கள் கூறிய 40 நாட்களுக்குள் எந்த முதலீடும் வெளியேறவில்லை என்பதற்கான ஆதாரங்கள்தான் இவை. ரிலையன்ஸ் சோலார் மற்றும் பேட்டரி சேமிப்பு உற்பத்தித் திட்டம் தொடர்பாக தமிழ்நாட்டுடன் எந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை. மேலும், இந்தத் திட்டம் குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும், எந்த மாநில அரசுக்கும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் எங்களுக்கு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான அறிவிப்பு ஏதேனும் வெளியிடப்பட்டால்,
அது நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்திற்குப் பின்னரே நேரடியாக வெளியிடப்படும் என்று அந்நிறுவனமே தெளிவுபடுத்தியுள்ளது. கூகுள் தரவு
மையத் திட்டத்தைப் பொறுத்தவரை, கூகுளின் மதிப்பீடு ஆந்திரப் பிரதேசத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப் பட்டிருந்தது. அதற்கு தொடர்ச்சியாக
அமைந்துள்ள பரந்த அளிவிலான வறண்ட நிலங்களின் இருப்பு, வழங்கப்பட்ட ஊக்கத்தொகை தொகுப்பு, தரவு மைய செயல்பாடுகளுக்கு தேவையான நீர்
பயன்பாட்டு வசதிகள் போன்றவை முக்கிய காரணங்களாக அமைந்தன.

அக்னியாஸ் தொடர்பாக, வேம்பூரில் அமையவுள்ள தொழிற்சாலைகளுக்காக சக்தி ஏரோஸ்பேஸ் அண்ட் டிபென்ஸ் சிஸ்டம்ஸ் மற்றும் டைக்கான் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு இரண்டு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்காக சுமார் 2,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்ற திட்டத்திற்காக ராமநாதபுரத்தில் ஜீனஸ் நிறுவனத்திற்கும் நிலம்
ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏடிஏ அண்ட் கேப்ஸ் நிறுவனத்தை பெங்களூரிலிருந்து மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல்கள் டிஎன்டிஐசி மூலம் முன்னதாகவே தொடங்கப்பட்டு, மாநில அரசால் இது ஒரு முக்கிய உத்திசார் திட்டமாக முன்னெடுக்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் ஏடிஏ இருந்ததாகத் தகவல் கிடைத்தது. ஆனால், பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேரில் அந்த செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அண்டை மாநிலம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக ஏடிஏ அறிவித்தது. அதேவேளையில், ஏடிஏவுடன்
கலந்துரையாடல்கள் தொடங்கியபோதே கேப்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்பட்டன. ஏடிஏ-விற்கான திட்டத்துடன்
இணைந்தே கேப்ஸ்-கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. 

ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது கேப்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் மையத்தை தமிழ்நாட்டில் அமைப்பதற்கான வாய்ப்பைப் பெறுவதில் தமிழ்நாடு வலுவான நிலையில் உள்ளது. இதற்கான கலந்துரையாடல்களும் சாதகமான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும் திரு. ரகுநாதன் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள் ஆகும். எந்தத் திட்டமும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறவில்லை என்பதை
ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். மேலும், திரு. சுரேஷ் சம்பந்தம் அவர்கள் வெளியிட்ட பதிவிலும் பல நிறுவனங்கள் ஆந்திரப் பிரதேசத்திற்கு சென்று விட்டதாக கூறப்பட்டிருந்தது.
அதற்கும் விளக்கம் உள்ளது. ஹிண்டால்கோ நிறுவனம் தமிழ்நாட்டுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும்
இத்திட்டம், ஆப்பிள் ஐபோன்களுக்கான உயர்தர அலுமினிய கூறுகளை உற்பத்தி செய்வதை நோக்கமாக கொண்டிருக்கிறது. மேலும், 2020–21ஆம்
ஆண்டிலேயே ஹைட்ரோ நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்தப்பட்ட அலுமினிய எக்ஸ்ட்ரூஷன் ஆலையை ஹிண்டால்கோ நிறுவனம் குப்பத்தில் இயக்கி வருகிறது. அந்த ஆலையில் ஏற்கனவே தேவையான உற்பத்தித் திறன்கள் மற்றும் கட்டமைப்புகள் உள்ளதால், புதிய ஆலையை அமைப்பதை விட அங்குள்ள ஆலையை விரிவாக்குவது எளிதாகவும் விரைவாகவும் உள்ளது. இது ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்கனவே இயங்கி வரும் ஆலையின் விரிவாக்கத் திட்டம் மட்டுமே ஆகும்.

Related

“புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது: நீர்வளத்துறை அமைச்சர்‌ என். ஆனந்த்”